Pages

Wednesday 2 March 2011

தேமுதிக சார்பில் போட்டியிட ஏராளமானோர் விருப்ப மனு


வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட ஏராளமானோர் புதன்கிழமை விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் விருப்ப மனுக்களை தாக்கல்
செய்தனர்.
ஏப்ரல் 13-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதுவரை தனித்து போட்டியிட்ட தேமுதிக முதல் முறையாக அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
இந்நிலையில், தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் மார்ச் 2 முதல் 6-ம் தேதிக்குள் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும், பொதுத் தொகுதிகளுக்கு  ரூ. 10 ஆயிரமும், தனித் தொகுதிகளுக்கு ரூ. 5 ஆயிரமும், புதுச்சேரி மாநிலத்தில் பொதுத் தொகுதிக்கு ரூ. 5 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ. 2 ஆயிரத்து 500-ம் செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.            
முதல் நாளான புதன்கிழமை அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் இருந்து முதல் மனுவை விஜயகாந்த் பெற்றுக் கொண்டார்.
மாநில இளைஞரணிச் செயலாளர் எல்.கே. சுதீஷ், மாநிலப் பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன், தலைமைச் செயலாளர் ப. பார்த்தசாரதி, கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி. சந்திரகுமார், மாநில துணைச் செயலாளர் ஏ.ஆர். இளங்கோவன், தேர்தல் பணிச் செயலாளர் மாஃபா பாண்டியராஜன் உள்பட ஆயிரத்துக்கும் அதிகமானோர் விருப்ப மனுக்களை பெற்றுச் சென்றனர். விஜயகாந்துக்காக 500-க்கும் அதிகமான மனுக்களை தேமுதிகவினர் பெற்றுச் சென்றுள்ளனர்.

No comments:

Post a Comment