Pages

Wednesday 9 March 2011

காங்கிரஸ் தொகுதிகள்: இன்று ஆலோசனை

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் எவை என்பதை முடிவு செய்ய காங்கிரஸ் ஐவர் குழுவினர் திமுகவுடன் வியாழக்கிழமை (மார்ச் 10) பேச்சு நடத்த உள்ளனர்.
இத் தகவலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது:
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட காங்கிரஸ் ஐவர் குழுவின் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
திமுகவிடம் எந்தெந்த தொகுதிகளைக் கேட்பது என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அதன் பிறகு அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக குழுவினருடன் ஆலோசனை நடைபெறும். அநேகமாக வியாழக்கிழமை மாலைக்குள் முடிவு எட்டப்பட்டு தொகுதிகளின் பட்டியல் அறிவிக்கப்படும்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி கடந்த 7 ஆண்டுகளாக வெற்றிக் கூட்டணியாக தொடர்ந்து வருகிறது. கூட்டணி என்றால் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடப்பது இயல்பான ஒன்றுதான். எங்கள் கூட்டணி மிகவும் இணக்கமாக, வலுவானதாக உள்ளது.
திமுக - காங்கிரஸ் தலைவர்களிடமும், தொண்டர்களிடமும் எவ்வித சச்சரவும் இல்லை. மத்திய, மாநில அரசுகளின் சாதனைகள் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளன. எனவே, இக்கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
2ஜி அலைக்கற்றை விசாரணையில் சட்டம் தன் கடமையை செய்து வருகிறது. அது குறித்து திமுக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. காங்கிரஸýம் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. நீதி விசாரணையில் காங்கிரஸ் கட்சி எந்த விதத்திலும் தலையிடாது. இது தேர்தல் வெற்றியை எந்தவிதத்திலும் பாதிக்காது. கூட்டணியின் வெற்றிக்காக காங்கிரஸ் தொண்டர்கள் பாடுபடுவார்கள் என்றார் தங்கபாலு.
கருணாநிதி-தங்கபாலு கையெழுத்து: இதற்கிடையே காங்கிரஸ்-தி.மு.க. இடையேயான தொகுதி உடன்பாட்டு ஒப்பந்தத்தில் முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு இருவரும் புதன்கிழமை கையெழுத்திட்டனர்.
சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு புதன்கிழமை காலை வந்தார். முதல்வர் கருணாநிதியைச் சந்தித்த அவர், காங்கிரஸýக்கு 63 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது மனநிறைவை அளிக்கிறது. இதற்காக நன்றி சொல்வதற்காக முதல்வர் கருணாநிதியை சந்தித்தேன். தி.மு.க. வின் வெற்றிக்கு வாழ்த்தும் தெரிவித்தேன். காங்கிரஸ் வெற்றிபெற அவரும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மத்திய - மாநில அரசின் இந்த சாதனைகளுக்காக மக்கள் எங்களுக்கு அமோக வெற்றியைத் தேடித்தருவார்கள் என்றார் தங்கபாலு.
15 தொகுதிகள் எவை?: 2006 தேர்தலில் போட்டியிட்ட 48 தொகுதிகளை மீண்டும் ஒதுக்குவது என்றும், மீதமுள்ள 15 தொகுதிகளுக்கு மட்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர். தென் மாவட்டங்களை விட வட மாவட்டங்களில் காங்கிரஸýக்கு தொகுதி ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது. வட மாவட்டங்களில் திமுக கூட்டணியில் உள்ள பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலுவாக உள்ளதால் அந்த இரு கட்சிகளும் வட மாவட்டங்களில்தான் அதிக தொகுதிகளைக் கேட்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவும் வட மாவட்டத்திலேயே அதிகம் போட்டியிட விரும்பும் என்பதால் காங்கிரஸ் கட்சிக்கு வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்களில் அதிகத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

1 comment:

சக்தி கல்வி மையம் said...

ADMK -ல் அன்னும் சஸ்பென்ஸ் இருக்கே..

http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_10.html

Post a Comment