Pages

Thursday 24 February 2011

காங். மிரட்டலுக்கு பணிய கூடாது-கருணாநிதியிடம் தலைவர்கள் வலியுறுத்தல்

திமுக அரசின் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மக்கள் செல்வாக்கைப் பெற்றுள்ள இந்தத் திட்டங்கள், பாமக, விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லீம் லீக், கொங்கு மக்கள் கட்சி ஆகியவற்றின் துணையுடன், காங்கிரஸின் தயவும் சற்றும் தேவையின்றி தேர்தலை எதிர்கொள்ளலாம் என்று திமுக முன்னணித் தலைவர்கள், முதல்வர் கருணாநிதியிடம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

ஏதோ சொந்தமாக மிகப் பெரிய பலம் இருப்பது போல நினைத்துக் கொண்டு திமுகவுக்கு காங்கிரஸ் 3 நிபந்தனைகளை போட்டுள்ளது. அதன்படி 80 இடங்கள் வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும், குறைந்தபட்ச செயல் திட்டத்தை திமுக அறிவிக்க வேண்டும். இது திமுகவை எரிச்சல்பபடுத்தியுள்ளது.

இந்த நிலையில், கட்சியின் 2ம் கட்டத் தலைவர்கள் காங்கிரஸைத் தூக்கிப் போட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலையில் நடந்த இரண்டு திருமண விழாக்களில் கலந்து கொள்ள வந்த கருணாநிதி, அங்கு வைத்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர்களுடன் ஒரு ஆலோசனையை நடத்தியுள்ளார். அப்போது காங்கிரஸ் கோரிக்கைகள் குறித்து கருத்து கேட்டுள்ளார். அப்போது அவரே எதிர்பாராத வகையில், காங்கிரஸ் நமக்குத் தேவையில்லை என்று திமுக முன்னணியினர் கூறியதாக தெரிகிறது.

லோக்சபா தேர்தலில் நாம் அவர்களுக்கு 16 இடம் கொடுத்தோம். ஆனால் தங்கபாலு, மணிசங்கர அய்யர், இளங்கோவன் என முன்னணியினரைக் கூட வெற்றி பெற வைக்க முடியவில்லை அவர்களால். மேலும் அக்கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசல், பணத்தை செலவிடாமல் பதுக்கியது உள்ளிட்ட பல காரணங்களால் அதிமுக கூட்டணி 9 இடங்களில் வெல்ல காங்கிரஸாரே வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து விட்டனர்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை கையில் வைத்துக் கொண்டு சிபிஐ மூலம் மிரட்டல் விடுக்கிறது காங்கிரஸ். மிசாவையே நாம் பார்த்து விட்டோம். இதெல்லாம் நமக்கு மிகச் சாதாரணம். இனியும் காங்கிரஸின் மிரட்டல், நெருக்கடிகளுக்கு நாம் பணியத் தேவையில்லை.

நமது அரசின் திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அது போதும் நமக்கு. மேலும், வடக்கில் விடுதலைச் சிறுத்தைகள், பாமக ஆகியோர் நம்மிடம் உள்ளனர். கொங்கு நாடு மக்கள் கட்சியை கூட்டணியில் சேர்த்தால் மேற்குப் பகுதிகளிலும் வெல்லலாம். அமைச்சர் அழகிரியின் பயத்தால் தென் மாவட்டத்தில் போட்டி போடவே ஜெயலலிதா பயப்படும் நிலைமை உள்ளது. எனவே காங்கிரஸின் தயவு நமக்குத் தேவையில்லை என்பதே எங்களது எண்ணம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

காங்கிரசுக்கு கடந்த முறை 48 இடங்கள் தந்தோம். இப்போது 55 இடங்களை மட்டுமே கொடுத்தால் போதும். அதை ஏற்றால் வரட்டும், இல்லாவிட்டால் போகட்டும். மேலும் விஜய்காந்த் அதிமுகவுடன் தான் கூட்டணி அமைக்கப் போகிறார் என்பது உறுதியாகிவிட்டதால், காங்கிரசுக்கு நம்மை விட்டால் ஆளும் கிடையாது, அவர்கள் இப்போது எங்கும் போகவும் முடியாது என்றும் கூறியுள்ளனர்.

இந்த கருத்துக்களுக்கு முதல்வர் என்ன பதிலளித்தார் என்பது தெரியவில்லை. ஆனால் திமுகவினர் மத்தியில் காங்கிரஸ் மீது கடும் அதிருப்தி பரவியுள்ளது மட்டும் நிச்சயம்.

இதனால் இந்தக் கூட்டணி அமைந்தாலும் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் திமுகவினர் எந்த அளவுக்கு தேர்தல் வேலை செய்வார்கள் என்பதும் சந்தேகமே.

No comments:

Post a Comment