Pages

Thursday 24 February 2011

ஸ்ரீரங்கத்தில் ஜெ. போட்டியிட தொண்டர்கள் விருப்பம்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் போட்டியிடக் கோரி ஏராளமான தொண்டர்கள் மனு செய்துள்ளதால், ஜெயலலிதா, ஸ்ரீரங்கத்திலிருந்து இம்முறை போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிமுக சார்பில் தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநில சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு நேற்றுடன் அது முடிவடைந்தது.

இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, நடைபெற உள்ள 2011 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்களில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்றவர்கள், தங்களது வேட்பு மனுக்களை 5.2.2011 முதல் 23.2.2011 வரை கட்சி தலைமைக் அலுவலகத்தில் தாக்கல் செய்யலாம் என்று அறிவித்திருந்தார்.

ஜெ. போட்டியிடக் கோரி 1503 பேர் மனு:

அதன்படி, 23.2.2011 வரை 12,268 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில், பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து, தமிழ்நாட்டில் 1,503 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தாங்கள் போட்டியிடுவதற்கு வாய்ப்புகோரி, தமிழ்நாட்டில் 10,553 வேட்பு மனுக்களையும், புதுச்சேரி மாநிலத்தில் 181 வேட்பு மனுக்களையும், கேரள மாநிலத்தில் 31 வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்துள்ளனர்.

ரூ. 12.14 கோடி வசூல்:

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி மொத்தம் 12,268 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் வேட்பு மனு கட்டணமாக 12 கோடியே 14 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டு உள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கத்தில் நிற்பாரா?:

ஜெயலலிதா தங்களது தொகுதியில் போட்டியக் கோரி பெரும் திரளான அதிமுகவினர் மனு செய்துள்ள நிலையில், ஸ்ரீரங்கத்தில் போட்டியிட வேண்டும் என்று கோரியே அதிகம் பேர் விருப்ம் தெரிவித்துள்ளனராம்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என்று முன்னாள் அமைச்சர்கள் உள்பட சுமார் 1,500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மனு கொடுத்துள்ளனர்.

இவ்வாறு ஜெயலலிதாவுக்காக ஸ்ரீரங்கத்திலிருந்து அதிக விண்ணப்பங்களை போட வைத்ததே ஜெயலலிதா தான் என்று சொல்கிறார்கள். அதற்குக் காரணமும் இருக்கிறது.

ஆண்டிப்பட்டியை தவிர்ப்பது ஏன்?:

டான்சி தீர்ப்புக்குப் பிறகு நடந்த இடைத்தேர்தலில் சுமார் 50,000 வாக்கு வித்தியாசத்தில் ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா வென்றார். ஆனால், 2006ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா வென்றபோது வாக்கு வித்தியாசம் 25,000 ஆகக் குறைந்தது. பாதி ஓட்டு எங்க போச்சு என அதிமுக அதிர்ச்சியானது. இந் நிலையில் 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ஆண்டிப்பட்டியை அடக்கிய தேனி தொகுதியில் போட்டியிட்ட அதிமுகவின் தங்கதமிழ்ச்செல்வன் படுதோல்வி அடைந்தார்.

அதற்கு முக்கிய காரணம், ஆண்டிப்பட்டியிலும் அதிமுகவுக்குக் கிடைத்த மொத்த லீடிங் ஓட்டே 5,700 தான். இதனால் இம்முறை ஆண்டிப்பட்டியே வேண்டாம் சாமி என்ற முடிவுக்கு ஜெயலலிதா வந்துவிட்டார் என்கிறார்கள். மேலும் மத்திய அமைச்சர் அழகிரியின் தேர்தல் வேலைகளும் சேர்ந்துவிட்டால் கோவிந்தா தான் என்பதால் மதுரைக்கு அந்தப் பக்கமே வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறாராம்.

அதே நேரத்தில் வட மாவட்டங்களிலும் பாமக இல்லாமல் நிற்பது பர்கூர் ரிசல்ட் மாதிரி ஆகிவிடும் என்பதால் அதையும் தவிர்த்து விட்டு தனது பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள ஸ்ரீரங்கமே தனக்கு சரி வரும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம்.

மேலும் இதை உறுதி செய்யும் வகையில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு தாக்கல் செய்ய நீண்ட வரிசையில் அதிமுக அலுவலகம் முன் காத்திருக்க.. சரியாக 11.46 மணிக்கு திருச்சி மாவட்டச் செயலாளர் மனோகரை அழைத்த கட்சி நிர்வாகிகள், அவரிடம் ஜெயலலிதா பெயரில் ஸ்ரீரங்கத்தில் போட்டியிட பணம் கட்டச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் கொங்கு மண்டலத்தின் மீதும் அவருக்கு ஒரு கண் உள்ளது என்கிறார்கள்.

ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் போட்டியிடலாம் என்ற பரவலான எதிர்பார்ப்பு நிலவுகிறது. திருச்சியில் அவர் கூட்டிய பிரமாண்ட கூட்டத்தின்போது ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை தரிசித்தார் ஜெயலலிதா. அதேபோல மீண்டும் ஒருமுறையும் அவர் அங்கு சென்றார். அப்போதே அவர் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது நினைவிருக்கலாம்.

சேப்டிக்காக ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டாலும் கூட ஆண்டிப்பட்டியிலும் அவர் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment