Pages

Tuesday 5 April 2011

அறுபத்து மூவரையும் நீங்கள் ஆதரிக்கத்தான் போகிறீர்களா???


கருணாநிதி காங்கிரசுடன் தன் உறவு முறிந்ததாக அறிவித்தபோது, அது எல்லாதரப்பையும் மகிழ்ச்சி கொள்ள வைத்தது. தி.முக வினர் தங்கள் தோளில் இருந்த பாரம் இறங்கியதாக நினைத்து மகிழ்ந்தார்கள். எதிர்கட்சிகள் திமுகவின் பலம் குறைந்துவிடும் என எண்ணி மகிழ்ந்தார்கள் (அதிகார மற்றும் பொருளாதார பலம், ஆள் பலம் அல்ல). நடுநிலையானவர்கள் காங்கிரசின் உண்மையான பலம் என்னவென்று தெரிந்துபோகும் என்று மகிழ்ச்சியடைந்திருப்பார்கள், ஏனெனில் ஒரு தலைமுறையே காங்கிரஸ் தனித்து நின்றதைக் கண்டதில்லை. காங். தொண்டர்களும் தங்கள் பலத்தை காட்ட வாய்ப்பு வந்ததாக மகிழ்ந்தார்கள், ஒரு பெருங்குடிகாரனின் வீரத்துக்கும் மகிழ்ச்சிக்கும் ஒப்பானது இது என்றாலும் அவர்களது மனோநிலையும் பொதுவான நோக்கில் மகிழ்ச்சியே. ஈழ ஆதரவாளர்களை இப்பட்டியலில் இணைக்க முடியாது, அவர்கள் மகிழ்ச்சியைத் தொலைத்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிறது.
ஆக உங்கள் நிலைப்பாடு எதுவாயினும் காங்கிரஸ் தனித்து நின்றால் மகிழ்ச்சி என்பதுதான் உங்கள் கருத்தாக இருக்கும் இல்லையா? ஆகவே இந்த கழிசடை கூட்டத்தை நிரந்தரமாக தனிமைப்படுத்தி உங்கள் சந்தோஷத்தை நிரந்தரமாக்குங்களேன் என கோரித்தான் இக்கடித்தம்.
 காங்கிரசை புறக்கணிக்க மறுப்போரது முதல் வாதம் அது இந்திய சுதந்திரத்துக்கு உழைத்த கட்சி தியாகிகளின் கட்சி என்பதாக இருக்கும். இது தவறான புரிதல் என்பதே யதார்த்தம். அக்கட்சியில் சுதந்திரத்துக்கு போராடிய சிலரும் தியாகிகள் சிலரும் இருந்தார்கள் என்று சொல்வதுதான் சரி. அப்படியான நல்லவர்கள் பலரும் கட்சியால் அவமானப்படுத்தப்பட்டார்கள் அல்லது கைவிடப்பட்டார்கள். பகத்சிங்கை விட ஒரு சுதந்திரப் போராட்ட வீரன் இருந்திருக்க முடியுமா? அவரை காந்தியால் தூக்கிலிருந்து காப்பாற்ற இயலும் எனும் சூழல் நிலவியபோது அவர்களை லாகூர் மாநாட்டுக்கு முன்னால் தூக்கிலிடுவது நல்லது என்றார் காந்தி (ஒரிஜினல்). காங்கிரஸ் வெள்ளையர்களால் துவங்கப்பட்டது, வெள்ளையர்கள் பாதுகாப்பாக நாடாள வசதியாக மக்களை கட்டுப்படுத்த நடத்தப்பட்டது, அவர்கள் பாவேலைமுடிந்து கிளம்புகையில் அவர்களுக்கு விசுவாசமான வேலையாளாக நாட்டை பெற்றுக்கொள்ள நடத்தப்பட்டது. சுருங்கச்சொன்னால் அப்போது அக்கட்சி வெள்ளையனின் ஒரு பினாமி.
 வெள்ளையர்களால் துவங்கப்பட்டு வெள்ளையர்களுக்காகவே நடத்தப்பட்ட இக்கட்சி இப்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு வெள்ளையர்களிடமே வந்திருக்கிறது. இணையம் உலகையே ஒரு கிராமமாக்கிவிட்ட பிறகு எதை யார் ஆண்டால் என்ன என்று கேட்பீரேயானால் நீங்கள் இந்த வெள்ளையம்மாளின் மற்றொரு முகம் பற்றி தெரிந்துகொண்டாக வேண்டும். அவர் கேம்பிரிட்ஜில் படித்ததாக சொல்கிறார், கேம்பிரிட்ஜ் அதை மறுக்கிறது. விஷயம் அம்பலத்துக்கு வந்த பிறகு தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் இருந்து தன் கல்வித்தகுதியை வாபஸ் பெறுகிறார் (ராகுல் காந்தியின் கல்வித்தகுதியும் ஏறத்தாழ இந்த வகையானதுதான்). அவர் தன் இத்தாலிய குடியுரிமையை துறந்துவிட்டதாக சொல்லும் ஆவணம்கூட முறையானது அல்ல. இத்தாலிய குடியுரிமையை துறந்ததாக சோனியாவே சொல்லிவிட்டதாக சொல்லும் ஒரு ஆவணம்தான் அந்த தூதரகத்தால் தரப்பட்டிருக்கிறது (ராசா குற்றவாளி இல்லை என அவரே சொன்னதால் அவர் குற்றவாளி அல்ல என நக்கீரன் சொல்வது போல). குவாட்டரோச்சியை காப்பாற்ற அவர் எடுத்த அசுரத்தனமான முயற்சி அவனைக்காட்டிலும் அதிகம் சம்பாதித்துக்கொடுத்த ராசா விசயத்தில் இல்லையே ஏன்? ஒரு இத்தாலிய புரோக்கர்கூட தண்டனைக்குள்ளாவதை அவர் விரும்பவில்லை என்பது உங்களுக்கு புரியவில்லையா?
சோனியாவை தியாகி என அதிகமாக கொண்டாடியது தமிழகமே. எந்த ஒரு மரணம் அவருக்கு மாபெரும் செல்வத்துக்கான கதவுகளை திறந்ததோ அதே மரணம்தான் அவருக்கான பெருமளவு பரிதாபத்தையும் தேடித்தந்தது. அவரது கணவனின் மரணம்தான் ஒன்றரை லட்சம் ஈழமக்களின் மரணத்துக்கான ஒரே நியாயமாக அவரது ஆட்களால் சொல்லப்பட்டது. ஆனால் இந்த அரக்கத்தனம் அவருடைய இயல்பு என்று கருதலாமே ஒழிய அவரது கோபத்தின் வெளிப்பாடாக கருத இயலாது. அப்படி அவர் கோபப்படுபவராயின் இன்றைக்கு சுப்ரமணியன்சாமிதான் அவரது முதல் இலக்காக இருந்திருக்க வேண்டும்., சாமி இன்னமும் ராஜீவை கொன்றது சோனியாதான் என்கிறார். முசோலினியின் படைத்தளபதியின் மகளாக பிறந்து மூன்று சர்வாதிகாரிகள் நடமாடிய வீட்டிற்கு வாழ்க்கைப்பட்டவர். தன் வீட்டின் இன்னொரு மருமகளை நள்ளிரவில் விரட்டியடித்தவர். தியாகத்தின் நிழல்கூட படாதவர் தியாகியென கொண்டாடப்பட்டது காலத்தின் கொடூரமான நகைச்சுவையே.
ஹிட்லரும் ராணுவத்தில் சேராதுபோயிருந்தால் ஒரு ஓவியனாக இருந்து உயிரை விட்டிருப்பார். அதுபோலவே சோனியாவும் அரசாள வந்திருக்காவிட்டால் தியாகியாகவே கருதப்பட்டிருக்கக்கூடும். பிரதமர் பதவியை மறுத்துவிட்டு அங்கு மன்மோகனை அமர்த்தியவர் என அவரது அடிமைகள் கொண்டாடுகிறார்கள். இவர்களைவிட தி.மு.கவினர் பரவாயில்லை, ராஜாவை அமைச்சராக்கி அழகுபார்த்த கனிமொழியை தியாகியென அவர்கள் கொண்டாடவில்லை. முதலில் அவர் ராஜீவின் பின்னால் நின்று பொருளீட்டினார் அவர் போய் சேர்ந்த பின்னர் சில ஆண்டுகள் கழித்து மன்மோகனை முன்னிருத்தி பொருளீட்டுகிறார், இதில் தியாகம் எங்கிருந்து வந்தது? அவருடைய அதீத அதிகார மோகம்தான் ராகுலின் திருமணத்தைக்கூட கைகூடவிடாமல் தடுக்கிறது என்பதற்கான மறுப்பை எந்த காங்கிரஸ்காரனாலும் சொல்ல இயலாது (எல்லோருக்கும் தெரிந்த ரகசியமான ராகுலின் ஸ்பெயின் காதலி இன்னமும் வெயிட்டிங்கில்தான் இருக்கிறார்.. ராகுலின் வயது 41). சோனியா ஒரு நல்ல இத்தாலி குடிமகளாக இருந்திருக்கிறார் என்பதைத்தவிர வேறு எந்த நற்செய்தியும் அவரைப்பற்றி சொல்வதற்கில்லை.
சோனியாவின் வரலாறை இவ்வளவு நீட்டி முழக்க காரணமிருக்கிறது. அவரது காலடியில் கிடக்கும் நாயாகவே காங்கிரஸ் கட்சி இப்போது இருக்கிறது. ராகுல் எனும் இளவரசனுக்கு பயிற்சி தந்து அவரை பிரதமராக்கும் வகுப்புக்கள்தான் இப்போது நடக்கும் அரசு. அவர் அரசாள வரும்போது முழு சர்வாதிகாரியாகவே இருப்பார், ஏனெனில் இப்போது அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் கட்சியை அப்படித்தான் நடத்துகிறார். எப்படிப்பட்ட சர்வாதிகாரியாக இருக்கவேண்டும் என்பதற்கு அவரது பாட்டியும் பெரியப்பனும் வழிகாட்டிவிட்டார்கள். இவர்கள் கோபமாக இருந்தால் மனிதப்படுகொலையை முன்னின்று நடத்துவார்கள் (சீக்கியப் படுகொலை), அதிகாரமிருந்தால் கொல்லச்சொல்லி ரசிப்பார்கள் (ஈழம்) அல்லது தேவையெனில் சட்டபூர்வமாக செய்வார்கள் (காட்டு வேட்டை). திமுகவை ஒழிக்க அவரது வீட்டிலேயே ஆள் இருக்கிறது, அதிமுகவை ஒழிக்க அம்மா எனும் ஒரு சக்தியே போதும். ஆனால் காங்கிரசை ஒழிக்க நாம்தான் ஏதாவது செய்தாகவேண்டும். தொண்டர்களே இல்லாத கட்சிக்கு அறுபத்து மூன்று இடங்கள் எனும் அங்கீகாரம் நம் சாலையில் கிடக்கும் அசிங்கம் போன்றதென்றால் அதில் சிலர் தேர்ந்தெடுக்கப்படுவது அந்த அசிங்கத்தை நம் சட்டையில் பூசிக்கொள்வது போன்றது.
நீங்கள் குடும்ப ஆட்சியை விரும்பாதவர் என்றால் காங்கிரசை ஒழித்தாகவேண்டும், பரம்பரையாக இந்தியாவை ஆளும் லட்சியத்தோடு உள்ள உள்வீட்டு பிரச்சனையில்லாத குடும்பம் சோனியாவுடையதுதான். போட்டியில் இருக்க தகுதி பெற்ற ஒருவரை காலன் கூட்டிச்செல்ல இன்னொருவரை சோனியாவே விரட்டியடித்தார், எமதர்மன் எப்போதும் இவருக்கு சகாயம் செய்பவனாகவே இருந்திருக்கிறான்.
நீங்கள் ஈழத்தைப் பற்றி அக்கறையில்லாத தமிழரென்றாலும் காங்கிரசை புறக்கணித்தாக வேண்டும். காரணம் அவருக்கு தமிழக தமிழனென்றும் ஈழத்தமிழனென்றும் பிரித்தறியத் தெரியாது. முல்லைப்பெரியாறு மற்றும் காவிரி நதிநீர் துரோகமும், மீனவர்களின் மரணம் அதைத்தான் சொல்கிறது.
 நீங்கள் சிறுபன்மையோர் நலன் குறித்து அக்கறைப்படுபவர் என்றால் காங்கிரசை புறக்கணித்தாக வேண்டும். சீக்கியர்களை கொல்ல அவர்களே போனார்கள், இசுலாமிரை கொல்ல ஆர்.எஸ்.எஸ் போனபோது அவர்கள் மவுனமாக ஆதரித்தார்கள்.
 நீங்கள் கருணாநிதியில் ஆதரவாளர் எனில் காங்கிரசை புறக்கணித்தாக வேண்டும். கருணாநிதியின் ராஜதந்திரி எனும் பிம்பத்தின் மீது மூன்று சீட்டு எனும் அஸ்திரம் மூலம் சாணத்தை பூசியவர் சோனியாதான்.
 கருணாவை வெறுப்பவர் எனில் நீங்கள் காங்கிரசை புறக்கணிக்க வேண்டும். இல்லாவிட்டால் காங்கிரசை வளர்த்துவிட்ட குற்றத்தை செய்தவர்கள் பட்டியலில் அவருடன் நீங்களும் இடம் பிடித்துவிடுவீர்கள்.
நீங்கள் ஏழை எனில் காங்கிரசை ஆதரிக்காதீர்கள், எலிகளுக்கு இனாமாகத் தரும் தானியத்தை உங்களுக்கு தரமாட்டோம் என தயக்கமில்லாமல் சொன்னவர்கள் இவர்கள்.
 நீங்கள் நடுத்தர வர்கத்தவர் எனில் காங்கிரசை ஆதரிக்காதீர்கள், உங்களிடம் முன்கூட்டியே பிடுங்கப்படும் வரி ஹசன் அலியிடமிருந்து யாசகமாகக் கூட கோரப்படவில்லை. நாம் வாங்கும் ஒரு லிட்டர் பெட் ரோலில் உள்ள வரி ஐம்பத்து இரண்டு சதவிகிதம், ஒரு சதவிகிதம்கூட வரிபிடித்தம் இல்லாமல் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்புப் பணம் எழுபது லட்சம் கோடி.
ஒருவேளை நீங்கள் ராகுலுக்கு கல்யாணம் ஆகவேண்டும் என ஆசைப்பட்டாலும் காங்கிரசை புறக்கணித்தால்தான் உண்டு. இனி அதிகாரத்துக்கு வழியில்லை என்ற சூழல்வந்தால் மட்டுமே ராகுலால் அவரது வெளிநாட்டு காதலியை மணமுடிக்க இயலும்.
 நீங்கள் ஈழமக்களுக்கு ஏதேனும் ஆறுதல் சொல்ல விரும்பினாலும் காங்கிரசை தமிழ்நாட்டில் இருந்து ஒழித்துவிட்டுத்தான் அதை சொல்ல முடியும்.
ஆகவே… தலைப்பை மீண்டும் ஒருமுறை படியுங்கள்…..
 சில விதிவிலக்குகள்: நீங்கள் ஈழ ஆதரவாளர் எனில் இந்தக் கடிதம் உங்களுக்கு அவசியப்படாது. அம்மாவின் பக்தர்கள் எனில், சிந்திக்க கற்ற பிறகு இது என்ன கடிதம் என்று தெரிந்துகொள்ளலாம்.
நண்பர் ஒருவர் எழுதியது……….
63 தொகுதிகளிலும் காங்கிரசை வேரறுக்க இந்த கட்டுரை ஒரு சிறிய அளவில் உதவும் என்ற எண்ணுகின்றேன்…

2 comments:

மாயாவி said...

அருமையான கருத்துக்கள்... நான் ஈழ ஆதரவாளன் எனவே கண்டிப்பாக காங்கிரஸை கறுவருப்போம்.

ராஜேஷ், திருச்சி said...

NO SUPPORT To CONGRESS in 63 consituencies.. we will support only DMK , VC, Kongu and others in that alliance in the rest 171 constituency

Post a Comment